அகக்கண்
ஆள்கூட்டம் குறைவாக இருந்த அந்த பேருந்து நிலையத்தின் மூலையில் தனியாக எந்த சலனமும் இல்லாமல், தோள் பையை உட்கார்ந்திருந்த பெஞ்சில் தன் அருகில் வைத்துக்கொண்டு தனக்குள்ளாக ஆழ்ந்திருந்தார். அவராகத்தான் இருக்க முடியும் என்பதை தூரத்திலிருந்தே கண்டுகொண்டு ஒரு கணம் நின்று பரவசமும் பதற்றமும் மனதில் பொங்க அவரை நோக்கி காலை எடுத்து வைத்தான். ஒரேயொரு நாவல் மட்டுமே எழுதியுள்ளார். வேறொன்றும் இல்லாத கருமை நிற பின்னணியில் பொன்னிற எழுத்துக்களால் தலைப்பிடப்பட்ட முன்பக்க அட்டை. பின்பக்க அட்டையில் அவரின் கண்கள் இல்லாத கோட்டோவியம். நூற்றைம்பது பக்கம் தான். முதல்முறை தலைப்பை படித்ததும் ஏற்பட்ட திடுக்கிடல் இன்றும் நியாபகமிருக்கிறது. மானசீகமாக ஶ்ரீதருக்கென்றே எழுதப்பட்ட நாவல் என அவன் நினைத்ததுண்டு. புனைபெயரா நிஜபெயரா என்றறிய முடியாத, ஆசிரியர் குறிப்பில்லாத, ஒரு நாவல். அவரின் பெயரையும் அந்த நாவலின் பெயரையும் கூகுளில் போட்டால் அந்த புத்தகம் கூட வராது. அந்த பதிப்பகம் கூட இப்போது இல்லை. அவரைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் எங்கும் இல்லை. அந்த நாவல் தான் அவர். ஶ்ரீதரிடமிருப்பது அவரின் கோட்டோவி...