மறைவின் வருகை
பாட்டா ஒருநாளும் என்னைத் தேடி வந்ததில்லை. ஆனால் எனக்கு பார்க்க வேண்டுமென்று தோன்றும்போது நிச்சயம் என் கண்ணில் தென்பட்டுவிடுவார். அப்படித்தான் அன்றொரு நாள் புரவிபாளையத்திலிருந்து எங்கள் ஊருக்கு வந்து சேரும் சாலையின் ஓரமாக நின்றிருந்த பாட்டாவைப் பார்த்தேன். மேலாடையின்றி தலையில் உருமாலையும் இடுப்பில் வேட்டியும் அணிந்து, நரைத்திருந்த புருவத்தின் மீது வலது கையை வைத்து அண்ணாந்து கண்களை இடுக்கி வானைப் பார்த்துக் கொண்டிருந்தார். அனிச்சையாக நானும் பாட்டா பார்த்த திசையில் மேலே நோக்கினேன். நடுவானில் இருந்த சூரியனின் ஒளி, கண்களை கூசச்செய்து கண்ணீரைத் துளிர்க்கச்செய்யும் அளவுக்கு பிரகாசமாக இருந்தது. சூரியனைச் சுற்றி ஒரு ஒளியாலான வட்டம் இருப்பது போலப்பட்டது. நான் பாட்டாவை நெருங்கினேன். ஆள் வரும் சத்தம் கேட்டு பாட்டா கைகளால் கண்களை கசக்கியபடி பார்த்தார். வருவது நானென அறிந்ததும் புன்னகையுடன் ‘இன்னைக்கு வட்டம் போட்டிருக்கு மழை வரும்’ என்றார். மீண்டும் மேலே வெளிச்ச வட்டத்தைப் பார்த்தேன். வெயில் பொழிந்துகொண்டிருந்தது. மழை வர்றது உறுதி என்றார். வட்டம் இருந்தா மழை வராதுன்னு தான அன்னைக்கு சொன்னீங்க...? அது ...